அன்னிய நேரடி முதலீடு, தனியார்மயம் ரயில்வே தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்: எஸ்ஆர்எம்யூ எச்சரிக்கை
திருச்சி: ரயில்வே எஸ்ஆர்எம்யூ மத்திய சங்க தலைவர் ராஜாஸ்ரீதர் திருச்சியில் கூறியதாவது:ரயில்வே துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இதனால், ரயில்வே தொழிலாளர்கள் மட்டுமல்ல. ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், சரக்கு மற்றும் பார்சல் சர்வீஸ் உபயோகிப்பாளர்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுவர். பயணிகளின் போக்குவரத்து கட்டணம், ஆண்டு சீசன் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். அன்னிய நேரடி முதலீடு, தனியார் மயம் உள்ளிட்டவற்றால், லட்சக்கணக்கான ரயில்வே தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு அபாயம் உள்ளது.
ரயில்வேயில் 2.5 லட்சம் தொழிலாளர்களின் காலியிடங்களை நிரப்பாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. 14 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் தொழிலாளர்கள் உள்ளனர். பயணிகளின் பாதுகாப்பான பயணம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து ரயில்வே தொழிலாளர்கள் அனைவரும் நேற்று ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க மறுத்தால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து நவம்பர் 18ம் தேதி முதல் 20 வரை கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் நடைபெற உள்ள மாநாடு முடிவெடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.