புதுடெல்லி: உலகில் இது வரை இல்லாத அளவுக்கு மிகவும் மெல்லிய ஆணுறை அடுத்த ஆண்டுக்குள் தயாரிக்கப்பட்டு விடும் என உலகப் பெரும் பணக்காரரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.உலகின் மிகப் பெரும் பணக்காரரும், மைக்ரோசாப்ட் கம்பெனி நிறுவனருமான பில்கேட்ஸ், தனது மனைவி மலிண்டாவுடன் 3 நாட்கள் சுற்றுபயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோரை நேற்று சந்தித்தார். பின்னர் ,அவர் பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சுகாதார சேவைகள் குறித்து பார்வையிட்டார். பள்ளி குழந்தைகளை சந்தித்து பில்கேட்சும், மிலிண்டாவும் உற்சாகமாக பேசி மகிழ்ந்தனர்.பின்னர், நிருபர்களிடம் பில்கேட்ஸ் கூறியதாவது:
பெரும்பாலான ஆண்கள், ஆணுறை அணிவதால் இன்பம் குறைவதாக உணர்கிறார்கள். அதனால்தான், ஆணுறை பயன்பாடு சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது. இதன் காரணமாகவே, எச்ஐவி கிருமிகள் பரவுகின்றன. எய்ட்ஸ் நோயை முற்றிலும் தடுக்க வேண்டும். அதற்கு ஆணுறை பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். எனவே, அணிந்திருப்பதே தெரியாத அளவுக்கு மிகவும் மெல்லிய ஆணுறையை தயாரிக்க வேண்டும். 2015ம் ஆண்டுக்குள் இது தயாரிக்கப்பட்டு விடும். அவ்வாறு தடிமன் குறைந்த ஆணுறை தயாரிக்கப்பட்டு விட்டால் அனைவரும் விருப்பத்துடன் பயன்படுத்துவார்கள்.
ஆனால், இது போன்ற ஆணுறைகளை குறைந்த செலவில் தயாரிப்பது மிகவும் சவாலானது.இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சுகாதார திட்டங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது. கவர்ச்சியான திட்டங்களாக இல்லாவிட்டாலும், மக்களுக்கு பயன் அளிக்ககூடிய திட்டங்களை மட்டுமே செயல்படுத்த வேண்டும். சுகாதாரத்துறையை மேம்படுத்த மேலும் நிதி ஒதுக்க வேண்டியது அவசியமாகும்.இவ்வாறு பில்கேட்ஸ் கூறினார். ஏழைகள் பயன்பெறும் வகையில், பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தை கொண்டு வந்ததற்காக மோடி அரசை அவர் பாராட்டினார்.