சாப்ட்வேர் ஊழியர்கள் வசதிக்காக மாநகர ஏசி பஸ்களில் வைஃபை: போக்குவரத்து கழகம் திட்டம்
சென்னை: சென்னையில் பணிபுரியும் சாப்ட்வேர் ஊழியர்கள் வசதிக்காக ராஜீவ்காந்தி சாலையில் செல்லும் ஏசி பஸ்களில் வைஃபை இணைப்பு அளிக்க மாநகர அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.சென்னை தரமணியில் இருந்து சிறுசேரி செல்லும் வழியில் அதிக அளவில் சாப்ட்வேர் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிறுனங்களின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் சென்று வருகின்றனர். குறிப்பாக சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழகம் ஏசி பஸ்களையே இந்த ஊழியர்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஊழியர்கள் பெரும்பாலும் தங்களின் பயணங்களின்போது அதிக தொழில் நுட்பம் கொண்ட மொபைல் போன், டேப் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவைகளை பயன்படுத்தியவாறு பயணிக்கின்றனர்.
இந்த ஊழியர்களை கவரும் வகையிலும், பயணத்தின் போதே தாங்கள் வைத்துள்ள லேப்டாப் மூலம் அலுவலக பணிகளை செய்வதற்கு வசதியாக ராஜீவ்காந்தி விரைவு போக்குவரத்து சாலையில் இயக்கப்படும் மாநகர ஏசி பஸ்களில் வைஃபை இணைப்பு வசதியை அளிக்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஏசி பஸ்களில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றவும், ஏசி பஸ்கள் மூலமாக மாநகர போக்குவரத்து கழகத்திற்கு அதிக வருவாய் ஈட்டவும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.