சென்னை: தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன. இவை தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் சென்று வருகின்றன.தமிழகத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்றாக இருந்த ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம், நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டாக பிரிந்தது. இந்நிலையில், அனைத்து இந்திய ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் கடந்த 1ம் தேதி முதல் பஸ்களுக்கான கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்தது. இதற்கு தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு மட்டுமின்றி, தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் நாங்கள்தான் என்று கூறியுள்ளது. இந்த இரு சங்கங்களுக்கு இடையிலான மோதலில் பாதிக்கப்படுவது நாங்கள் தான் என பயணிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள ஆம்னி பஸ்களை ஒருங்கிணைக்கும் வகையில், தனி இணையதளம் துவங்கி அதன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அதன் நிர்வாகிகள் கூறியதாவது: ஒரு சில உறுப்பினர்களை வைத்துக் கொண்டு சங்கம் என்ற போர்வையில், கட்டணத்தை உயர்த்தி வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்த ஆம்னி பஸ் உரிமையாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். அது மட்டுமல்லாமல், கூடுதல் கட்டணம் அறிவித்திருப்பவர்கள் சனி, ஞாயிறு மட்டும்தான் பஸ்களை இயக்கி வருகின்றனர். எனவே இவற்றை முறைப்படுத்துவதற்காக தனி இணையதளம் துவங்கி, அதன் மூலம் டிக்கெட் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு வர சில மாதங்கள் ஆகும் என்றனர்.