மழையால் ஷூட்டிங் பாதிப்பு: திரிஷா வருத்தம்
ஐதராபாத்: கடும் மழை காரணமாக திரிஷா பட ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது.தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக திரிஷா நடிக்கும் படத்தை சத்யதேவா இயக்குகிறார். இந்த பட ஷூட்டிங்கை ராம்பச்சோதாவரம் காட்டுப்பகுதியில் நடத்த படக்குழு முடிவு செய்தது. ஷெட்யூல்படி இங்கு 20 நாள் ஷூட்டிங் நடத்த வேண்டும். இதற்காக பாலகிருஷ்ணா, திரிஷா உள்பட பட யூனிட்டார் அனைவரும் காட்டுபகுதிக்கு வந்துவிட்டனர். அங்கு அருகிலுள்ள ஓட்டல் ஒன்றில் அனைவரும் தங்கியிருந்தனர். திட்டமிட்டபடி ஷூட்டிங்கும் தொடங்கியது. 4 நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் திடீரென மழை தொடங்கிவிட்டது. இதனால் படக்குழுவினர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்ல முடியவில்லை. திரிஷா உள்பட படக்குழுவினர் ஓட்டல் அறைகளிலே முடங்கினர். 3 நாட்கள் காத்திருந்து பார்த்தும் பயனில்லை. தொடர் மழையால் படப்பிடிப்பை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதையடுத்து பட ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு, ஐதராபாத்துக்கு குழுவினர் வந்துவிட்டனர். இதனால் பல லட்சம் நஷ்டம் என பட வட்டாரங்கள் தெரிவித்தன. தனது கால்ஷீட் வீண் ஆகிவிட்டதால் திரிஷாவும் வருத்தமாக இருக்கிறாராம்.