அதிமுக மாஜி அமைச்சர் உறவினர் தற்கொலை: போதகர் உள்பட 7 பேர் கைது: 6 பிரிவுகளில் போலீஸ் வழக்கு
சுசீந்திரம்: அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால் உறவினரான ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போதகர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள ஆண்டார்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (43). ஆட்டோ டிரைவர். அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமாலின் உறவினரான இவரது வீடு அருகே தேவாலயம் உள்ளது. சுற்றுசுவர் தொடர்பாக ராஜனுக்கும், ஆலய நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. திடீரென அந்த சுவர் இடிக்கப்பட்டு அந்த பகுதியில் புதிதாக சுவர் கட்டுவதற்கான பணிகளை ஆலய தரப்பில் தொடங்கி உள்ளனர். இதற்கு ராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். திடீரென மனம் உடைந்த அவர் விஷம் குடித்தார்.
அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜன் இறந்தார். இதுதொடர்பாக சுசீந்திரம் காவல் நிலையத்தில் ராஜனின், மனைவி ராஜாத்தி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஆலய போதகர் ஐசக் பாக்யராஜ் (43), நிர்வாகிகள் சேம் ஜோசப், சேம் மோகன் ராஜ், மற்றொரு பாக்யராஜ், வில்லியம், ஞானதங்கம், ஜேசிபி டிரைவர் தங்கம், மேசாக், ரசல்ராஜ், எபனேசர், ஞான ஜோஸ்பின் உள்பட 11 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதில் போதகர் ஐசக் பாக்யராஜ் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் இரண்டாவது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.