கடலோர பகுதியில் காற்று சுழற்சி: இரவு நேரங்களில் மழை பெய்யும்
சென்னை: கடலோர பகுதிகளில் காற்று சுழற்சி பரவி உள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் மழை பெய்யும்.தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு மழை பெய்கிறது. அதே நேரத்தில் தற்போது கேரளாவில் தென் மேற்கு பருவ மழை பெய்ததாலும் ஈரப்பதம் உறிஞ்சப்படுகிறது. இதனால் தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படுகிறது. இதையடுத்து வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் காற்று சுழற்சி பரவி உள்ளதால் தமிழகத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் மழை பெய்யும். பகல் நேரங்களில் அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வரை வெயில் இருக்கும். சென்னையை பொறுத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பிற்பகலில் ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.