அண்ணாநகர்: காரம்பாக்கத்தில் இரும்பு கம்பியால் தாக்கி ஆட்டோ டிரைவர் கொல்லப்பட்டார். இதில் கைதான கார் டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். போரூர் அடுத்த மதானந்தபுரம் பெல் நகரை சேர்ந்தவர் கருணாகரன். இவர் மகன் சதீஷ்குமார் (27). ஆட்டோ டிரைவர். பைக்கில் சென்ற இவரை பின்னால் மற்றொரு பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் நேற்று இரவு 9.30 மணி அளவில் காரம்பாக்கம் சோதனைச் சாவடி அருகே வழிமறித்தனர். இரும்பு கம்பியால் தாக்கி, கத்தியால் குத்தினர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாலிபர்கள் தப்பிவிட்டனர்.
தகவல் அறிந்த வளசரவாக்கம் போலீசார் சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக காரம்பாக்கம் மாமல்லர் தெருவை சேர்ந்த கார் டிரைவர் விஜயசந்திரன் (26), அவரது தம்பி ரஞ்ஜித் குமார் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் விஜயசந்திரன் கூறியது: கடந்த ஆண்டு மே மாதம் காரம்பாக்கம் புத்தர் காலனியில் நான் கார் நிறுத்தும் இடத்தில் சதீஷ்குமார் பைக்கை நிறுத்தி இருந்தார். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து சதீஷ்குமார், நண்பர்கள் 4 பேருடன் வந்து என்னை தாக்கினார். இதில் எனக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இது பற்றி வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தேன். இதுதொடர்பாக பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கு உள்ளது. அந்த பகையால் சதீஷ்குமாரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன்.
கடந்த 2ம் தேதி பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அன்று அங்கேயே தீர்த்துகட்ட நானும், என் தம்பி ரஞ்ஜித்குமாரும் காத்திருந்தோம். அன்று முடியவில்லை. அதனால் நேற்று இரவு சதிஷ்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நமக்குள் பகை வேண்டாம், சமாதானமாய் போய்விடுவோம், அது பற்றி பேச வேண்டும், நீ காரம்பாக்கம் வா என்று அழைத்தோம். அவரை காரம்பாக்கம் சோதனைச் சாவடி அருகில் மெயின் ரோட்டில் கொலை செய்தோம். இவ்வாறு விஜயசந்திரன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். சதீஷ்குமார் தாயார் லட்சுமி கூறும்போது, சதிஷ்குமாருக்கு திண்டிவனத்தில் பெண் பார்த்து முடிவு செய்தோம். அந்த பெண்ணுக்கு 25 பவுன் நகை போட முடிவு செய்து, நகை வாங்கி வைத்தோம். இந்த நிலையில் அவனை கொன்று விட்டார்கள். நேற்று இரவு போலீஸ் நிலையத்தில் 2 மணி நேரம் காத்திருந்தேன். காலையில் கமிஷனரிடம் புகார் செய்வேன் என்று கூறிய பிறகு தான் என்னிடம் புகார் வாங்கினார்கள் என்றார்.