சோமாலியா கொள்ளையர்களிடம் இருந்து மாலுமியை மீட்க முதல்வருக்கு கோரிக்கை
சென்னை: சோமாலியா கடல் கொள்ளையர்களிடம் இருந்து தூத்துக்குடி மாலுமியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியை சேர்ந்த லிப்ட்சன் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வரின் தனி பிரிவில் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:தனது மகன் தன்ட்சன், மும்பையில் உள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் மாலுமியாக பணியாற்றி வந்தார். கடந்த 28.9.2010ம் ஆண்டு சோமாலியா கடல் பகுதியில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது, சோமாலியா கடல் கொள்ளையர்கள் கப்பலில் இருந்த 15 பேரை கடத்தி சென்று விட்டனர். கொள்ளையர்களிடம் மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் 8 பேர் மட்டும் விடுவிக்கப்பட்டனர்.தற்போது எனது மகன் தன்ட்சன் உள்பட 7 பேர் பிணைக் கைதிகளாக உள்ளனர். விடுவிக்க கொள்ளையர்கள் ரூ.25 கோடி பணம் கேட்டனர். தற்போது ரூ.9 கோடி தர வேண்டும் என்கிறார்கள். மத்திய-மாநில அரசுகள் பலமுறை கோரிக்கை வைத்தும் விடுவிக்கப்படவில்லை. முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு மகனை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.