மர்மமாக இறந்த இளம்பெண் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை
சிதம்பரம்: சிதம்பரம் அருகே மர்மமான முறையில் இறந்த இளம்பெண்ணின் உடல் அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சிதம்பரம் வட்டம் கண்ணங்குடி அருகே உள்ள வேளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (25). மினி டெம்போ ஓட்டுனர். இவரது மனைவி ஜாய்ஸ்கமலா(23). காதல் திருமணம் செய்தவர்கள். 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 1ம் தேதி காலை ஜாய்ஸ்கமலா தூக்கு போட்டு இறந்ததாக அவரது தந்தை மாதவனுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் குடும்பத்தினருடன் சென்று பார்த்தபோது இறந்து போன ஜாய்ஸ்கமலாவின் உடலை அடக்கம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி மாதவன் சிதம்பரம் தாலுகா போலீசில் கடந்த 2ம்தேதி புகார் செய்தார்.
அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதால் அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என கூறியிருந்தார். போலீஸார் சந்தேக மரணம் என வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று சிதம்பரம் அருகே உள்ள கண்ணங்குடி வேளப்பாடி கிராமத்தில் புதைக்கப்பட்ட ஜாய்ஸ்கமலா உடல் சப்-கலெக்டர் அரவிந்த், வட்டாட்சியர் விஜயா, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லாமேக் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தடயவியல் மற்றும் சட்டம் சார்ந்த மருத்துவ துணை பேராசிரியர் டாக்டர் கீதாஞ்சலி, டாக்டர் ஆர்த்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். உள்ளுறுப்புகளின் மாதிரிகளை சேகரித்து விழுப்புரம் வட்ட தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.