மனைவி எரித்து கொலை: கணவனுக்கு ஆயுள் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
செங்கல்பட்டு: தாம்பரம் அடுத்த வெங்கம்பாக்கம் ஜெக ஜீவன் ராம் நகரை சேர்ந்தவர் ராஜி (44). கூலி தொழிலாளி. மனைவி கவுரி (42). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ராஜி குடிப்பழக்கம் உடையவர். வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது அடிக்கடி குடித்து விட்டு வருவார். மனைவி தட்டி கேட்டால் சரமாரியாக அடித்து உதைப்பார். கடந்த 2008, ஜனவரி 14ம் தேதி, எதிர் வீட்டை சேர்ந்த ஒருவர், தெருவில் போகி கொளுத்தினார். அவரிடம் ராஜி தகராறு செய்துள்ளார். உடனே கணவரை வீட்டுக்கு அழைத்து வந்தார் கவுரி. அப்போது ராஜி, உங்கள் இருவருக்கும் தொடர்பு உள்ளதா என கேட்டு திட்டியதோடு கவுரி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் கவுரி பரிதாபமாக இறந்தார். பீர்க்கன்காரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்த வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி ஆனந்தி, வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறினார். அதில், கவுரியை ராஜி தீயிட்டு எரித்தது உறுதியானதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வக்கீல் ஆனூர் வெங்கடேசன் ஆஜரானார்.