புதுவண்ணையில் பரபரப்பு எலி மருந்து சாப்பிட்ட இளம்பெண் பரிதாப சாவு மருத்துவமனை முற்றுகை கல்வீச்சு; சாலை மறியல்
தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் எலி மருந்து சாப்பிட்ட இளம்பெண் பரிதாபமாக இறந்தார். டாக்டர்கள் சரியான சிகிச்சை அளிக்காததால்தான் இறந்தார் எனக் கூறி உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு கல்வீசி தாக்குதல் நடத்தினர். சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகரை சேர்ந்தவர் முனுசாமி மகள் சுசித்ரா (25). விவாகரத்து பெற்றவர். பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், மீண்டும் படிக்க வேண்டும் என தந்தையிடம் சுசித்ரா கூறியுள்ளார். அதற்கு தந்தை மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் வீட்டில் மயங்கி கிடந்தார் சுசித்ரா. அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை மீட்டு தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனையில், சுசித்ரா எலி மருந்து சாப்பிட்டது தெரிந்தது. மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் இன்று அதிகாலையில் சுசித்ரா பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டனர். ‘முறையான சிகிச்சை அளிக்காததால்தான் சுசித்ரா இறந்தார் என கூறி விடிய விடிய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் கற்களை வீசினர். இதில் மருத்துவமனையின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. பின்னர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் நிலவியது.தகவல் அறிந்து வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் தெய்வசிகாமணி, திருவொற்றியூர் உதவி கமிஷனர் மோகன்ராஜ், நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ‘முறையான நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் உறுதி அளித்தனர். அதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.