புதுடெல்லி:மத்திய அமைச்சர்களுக்கான நேர்முக உதவியாளர் நியமனம் தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் 46 பேர் கொண்ட மத்திய அமைச்சரவை கடந்த மே மாதம் 26ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டது. இதை தொடர்ந்து அமைச்சர்களுக்கான செயலர் மற்றும் நேர்முக உதவியாளர்களை நியமிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடியின் ஆலோசனையின் பேரில் பிரதமர் அலுவலகத்திலிருந்து மத்திய பணியாளர் துறைக்கு ஒரு உத்தரவு பறந்தது. அதன்படி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மத்திய அமைச்சர்களிடம் நேர்முக உதவியாளராக இருந்தவர்களுக்கு மீண்டும் அதே பொறுப்பு வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பிட்ட அரசுக்கு விசுவாசிகள் என அரசு ஊழியர்களுக்கு முத்திரை குத்துவது தவறு என அதிருப்தி தெரிவித்தனர்.
இதற்கிடையில் இந்த உத்தரவு காரணமாக மத்திய அமைச்சர்களுக்கு புதிய நேர்முக உதவியாளர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இன்னும் பல அமைச்சர்களுக்கு நேர்முக உதவியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதை தொடர்ந்து நேர்முக உதவியாளர் நியமனம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்திலிருந்து புதிய உத்தரவு பணியாளர் துறைக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி 3 ஆண்டுகளில் நேர்முக உதவியாளராக இருந்தவர்களை தவிர மற்றவர்களை நேர்முக உதவியாளராக நியமிக்கலாம் என சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய உத்தரவு காரணமாக மத்திய உள்துறை அமைச்சரிடம் நேர்முக உதவியாளராக இருக்கும் அலோக் சிங், மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவிடம் பெர்சனல் செக்ரட்டரியாக இருக்கும் அபினவ் குமார் ஆகியோர் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களில் அலோக்சிங் சல்மான் குர்ஷித்திடமும், அபினவ் குமார் சசிதரூரிடமும் ஐ.மு.கூட்டணி அரசின் கடைசி காலம் வரை பெர்சனல் செகரேட்டரியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.