பெரணமல்லூர்:பில்லி, சூனியம் வைத்ததாக கூறி மாமியாரை மருமகன் உயிரோடு எரித்து கொன்ற சம்பவம் பெரணமல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னையை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி வள்ளியம்மாள் (65). இந்த தம்பதியின் மகள் மகாராணி (40). இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பெரணமல்லூர் அருகே உள்ள ரகுநாதசமுத்திரம் மதுரா பகவந்தபுரம் கிராமத்தை சேர்ந்த பூங்காவனம் (50) என்பவருக்கும் 30 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். பூங்காவனம் குடும்பத்தினர் மும்பையில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர்.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வள்ளியம்மாள் தனது மகள் மகாராணி வீட்டில் தங்கி வசித்து வந்தார். அப்போது மருமகன் பூங்காவனம், வள்ளியம்மாளிடம் ‘என் குடும்பத்துக்கு நீ பில்லி, சூனியம் வைத்துள்ளாய்‘ என்று கூறி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு செய்துள்ளார். பின்னர் வள்ளியம்மாள் வீட்டில் உள்ள ஒரு அறை யில் படுத்து தூங்கினார். அவர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த பூங்காவனம், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து வந்து வள்ளியம்மாள் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். உடல் முழுவதும் தீ பரவியதால் வள்ளியம்மாள் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். இதை பார்த்த பூங்காவனம் தப்பியோடி விட்டார்.
பலத்த தீக்காயமடைந்த வள்ளியம்மாளை ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி வள்ளியம்மாள் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரணமல்லூர் போலீசில் வள்ளியம்மாளின் மகன் கணபதி (45) நேற்று புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அப்பாசாமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கிராமத்தில் பதுங்கி இருந்த பூங்காவனத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.ஒரே குடும்பத்தில் 5 பேர் அணையில் மூழ்கி பலி