பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை பெரிதும் பாதிக்கும் ராமதாஸ் அறிக்கை
சென்னை: சாதாரண மக்களுக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேட்டு கொண்டுள்ளார். ராமதாஸ் அறிக்கை:மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது இது இரண்டாவது முறையாகும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டத்தின்படி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டீசல் விலை மாதத்துக்கு 50 பைசா வீதம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 17 தவணைகளில் மொத்தம் ரூ.11.57 பைசா டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் லாரி வாடகைக் கட்டணமும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் ஏற்கனவே உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வு சாதாரண மக்களுக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும்.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் விலைவாசி குறையும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதை நிறைவேற்ற வேண்டியது புதிய அரசின் கடமை ஆகும். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதுமட்டுமின்றி, எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்க வகை செய்யும் விலை நிர்ணயக் கொள்கையையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்