காரைக்குடியில் முகாமிடும் இயக்குனர்கள்
சென்னை:காரைக்குடியில் ஷூட்டிங் நடத்த ஆர்வம் காட்டுகிறார்கள் இயக்குனர்கள்.சில வருடங்களுக்கு முன் பொள்ளாச்சியில்தான் கோலிவுட் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. இடைக்காலத்தில் மதுரை சம்பந்தப்பட்ட கதைகள் அதிகம் வந்ததால் மதுரையில் ஷூட்டிங் நடத்தினர். தற்போது கோலிவுட் இயக்குனர்கள் பார்வை காரைக்குடி பக்கம் திரும்பி இருக்கிறது.
சமீபத்தில் திரைக்கு வந்த ‘சைவம்' படம் காரைக்குடியை மையமாக வைத்து படமானது. விஜய் இயக்கிய இப்படத்தில் நாசர், பேபி சாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது ஹரி இயக்கும் ‘பூஜை' படத்தின் ஷூட்டிங் காரைக்குடியில் நடக்கிறது.
காரைக்குடி ஷூட்டிங்பற்றி பட ஹீரோயின் ஸ்ருதி ஹாசன் தனது இணைய தள பக்கத்தில் கூறும்போது,‘செம சாப்பாடு... ஐய்யோ... அதன் வகைகளை பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறியது. அவைகளை அப்படியே சாப்பிட்டுவிட முடியாது. ரசித்து ரசித்துத்தான் சாப்பிட வேண்டும்' என்றார்.
இயக்குனர் ஹரியை பொறுத்தவரை அவருடைய படங்களின் பெரும்பகுதி காரைக்குடியில் படமாகும். நெல்லை, கோவை கதைக்களமாக இருந்தாலும் அதற்கான செட்டை காரைக்குடியில் போட்டுத்தான் படமாக்குவார். ‘சாமி', ‘அருள்' போன்ற படங்கள் இப்படித்தான் உருவாகின.