திருப்பதி: திருப்பதி கோயிலுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் லாரி மோதி பரிதாபமாக இறந்தனர். ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் குரிச்சேடு பகுதியை சேர்ந்தவர் ரமணாரெட்டி(45). இவரது மனைவி ஆதிலட்சுமி(40). உறவினர்கள் அஸ்வினி(22), காசியம்மா(35), ஹரி(30), வெங்கட்டரெட்டி(35), கீர்த்தி(5), கீதா கோட்டீஸ்வரி(7), வெங்கட்டரத்தனம்மா(40) உள்ளிட்ட 12 பேர் நேற்று சுவாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு டெம்போ வேனில் சென்றனர்.இன்று அதிகாலை 3 மணியளவில் நெல்லூர் மாவட்டம் கொடவலூரு மண்டலம் நார்த்துராஜூ பாளையம் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது டெம்போ வேன் டயர் திடீரென பஞ்சரானது. இதனால், டெம்போவில் இருந்தவர்கள் அனைவரும் கீழே இறங்கி சாலையோரம் உள்ள தடுப்பு சுவரின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தனர். டிரைவர் உள்ளிட்ட சிலர் பஞ்சரான டெம்போ வேன் டயரை மாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது நெல்லூர் மாவட்டம் காவலியிலிருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு லாரி திடீரென டெம்போ மற்றும் தடுப்பு சுவர் மீது உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. ரமணாரெட்டி, ஆதிலட்சுமி, அஸ்வினி, காசியம்மா, ஹரி ஆகியோர் உடல் நசுங்கி இறந்தனர். படுகாயமடைந்த 5 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.