ஆத்தூர்: ஆத்தூர் அருகே பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவரது உடலை எடுக்கவிடாமல் கிராம மக்கள் விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள புளியங்குறிச்சியைச் சேர்ந்தவர் தாண்டவன் (50). இவரது மனைவி காசியம்மாள் (45). இவர்களுக்கு சத்யராஜ் (24), சின்ராஜ் (22) என்ற மகன்கள். தாண்டவன் புதுச்சேரியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். காசியம்மாள் 2 மகன்களுடன் புளியங்குறிச்சியில் வசித்து வந்தார். மாட்டின் தீவனத்திற்காக காசியம்மாள் தினமும் மாலையில் அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு புல் அறுக்கச் செல்வது வழக்கம். அதே போல் நேற்று மாலையும் புல் அறுக்கச் சென்றார். ஆனால் இரவு 10 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் மகன்கள் சந்தேகம் அடைந்து தாயை தேடி தோட்டத்திற்கு சென்றனர். அப்போது சங்கரன் என்பவரின் விவசாய தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ள வயலின் நடுவில் மேலாடையின்றி அரை நிர்வாண கோலத்தில் காசியம்மாள் பிணமாக கிடந்தார்.
அவரது மூக்கு மற்றும் பிறப்பு உறுப்பில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. தாயின் உடலை பார்த்து மகன்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். தகவல் அறிந்து கிராம மக்கள் நள்ளிரவில் பெருமளவில் திரண்டனர்.இதுபற்றி தகவல்அறிந்த வீரகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப போலீசார் முயன்ற போது பொதுமக்கள் தடுத்தனர். குற்றவாளிகளை கைது செய்யாமல் உடலை எடுக்கக்கூடாது என்று தெரிவித்தனர். இதுபற்றி எஸ்பி சக்திவேலுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் 2 மணி அளவில் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று அதிகாலை 6 மணிக்கு மோப்பநாய் அர்ஜூன் சேலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது. உடல் கிடந்த பகுதியில் மோப்பம் பிடித்த நாய், தோட்டத்திற்குள் சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. இதேபோல் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயம் சேகரிக்கப்பட்டது.இதையடுத்து உடலை கொண்டு செல்ல பொதுமக்கள் அனுமதித்தனர். போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.காசியம்மாள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தோட்டத்தின் உரிமையாளர் சங்கர் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால் போலீசார் அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.