நாகை: இலங்கை சிறையில் இருந்த நேற்று மாலை விடுதலையான 46 தமிழக மீனவர்கள் இன்றிரவு ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்களது 11 விசைப்படகுகள் விடுவிக்கப்படாததால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் கடற்கரையில் இருந்து கடந்த 18ம் தேதி மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 46 தமிழக மீனவர்கள் கோர்ட் உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் 11 படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் அனுராதபுரம் சிறையிலும், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 24 பேர் யாழ்ப்பாணம் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனர். அதன்பின் 2 நாளில் நாகை மீனவர்கள் 7 பேர், 2 நாட்களுக்கு முன்பு ஜெகதாபட்டினம் மீனவர்கள் 11 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் திரிகோணமலை, யாழ்ப்பாணம் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.மத்திய அரசின் நடவடிக்கையை தொடர்ந்து, இலங்கை யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் சிறைகளில் இருந்த 46 மீனவர்கள் மட்டும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை தலைமன்னார் கோர்ட் நீதிபதி ஆனந்தி கனகரத்தினம், ஊர்காவல்துறை கோர்ட் நீதிபதி லெனின்குமார் ஆகியோர் இவர்களை விடுதலை செய்து நேற்று மாலை உத்தரவிட்டனர். இதையடுத்து நேற்று மாலை மீனவர்கள் 46 பேரும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரக அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.விடுதலையான 46 பேரும் இன்றிரவு அல்லது நாளை அதிகாலை ஊர் திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட போதிலும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு விடுவிக்கவில்லை.