ஆவடி: ஆவடி அடுத்த கருணாகரச்சேரி ஊராட்சி ராமாபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்தார். திருவள்ளூர் ஆர்டிஓ அபிராமி வரவேற்றார்.அமைச்சர் அப்துல்ரகீம், 137 பேருக்கு ரூ.36.53 லட்சத்துக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும், 13 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை களையும் வழங்கினார்.முகாமில், வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி புறவழி சாலையில் கருணாகரச்சேரி பகுதியில் 117 ஏக்கர் விளை நிலங்களை கையப்படுத்தி கனரக வாகன சரக்கு முனையம் அமைக்க கூடாது, இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே கருணாகரச்சேரிக்கு பதிலாக வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பில் ஊராட்சி தலைவர் பக்தவச்சலம், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்து பேசினார்.பொது சுகாதாரம், கல்வி, சமூக நலம், வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை, கூட்டுறவு, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தன. மேலும் மழைநீர் சேகரிப்பு குறித்த மாணவ, மாணவிகளின் வில்லுப்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடந்தது.