குமரியில் பயங்கர கடல் சீற்றம் 30 அடி உயர தூண் உடைந்தது மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர்
குளச்சல்: குமரி மாவட்டம் குளச்சல் கடலில் இன்று காலை ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக 30 அடி உயர தூண் உடைந்து கடலுக்குள் விழுந்தது. இதையடுத்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் அவசரம் அவசரமாக கரை திரும்பினர்.குளச்சல் கடல் பகுதியில் தற்போது 45 நாட்களுக்கு மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளது. இதனால் விசைபடகுகளை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மாறாக பைபர் வள்ளங்கள் மற்றும் கட்டு மரங்களை சேர்ந்த மீனவர்கள் வழக்கமாக இன்று காலை மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது திடீரென்று கடலில் சீற்றம் அதிக அளவில் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து, மணற்பரப்பையும் தாண்டி விழுந்தது. சில அலைகள் குளச்சல் துறைமுகத்துக்காக அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர தூண்கள் மீது விழுந்தது. இதில் சில தூண்கள் சேதம் அடைந்தன. ஒரு தூண் உடைந்து கடலில் விழுந்தது.ஏற்கனவே கடந்த 1997ல் ஏற்பட்ட கடல் சீற்றத்தின் போது, 2 தூண்கள் உடைந்து கடலில் விழுந்தன. அதன் பின்னர் 2 தூண்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் வந்த கடல் சீற்றத்தில் முறிந்து விழுந்தது. தற்போது 5 வது தூண் இன்று முறிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.குளச்சலில் காணப்பட்ட திடீர் கடல் சீற்றம் காரணமாக, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பைபர் வள்ளம் மற்றும் கட்டுமர மீனவர்கள் அவசரம் அவசரமாக கரை திரும்பினர். இந்த சம்பவம் காரணமாக கடற்கரை கிராமங்களில் பரபரப்பு காணப்பட்டது.