ஓசூர்: ஓசூரில் காரை வழிமறித்து பிரபல ரவுடி முகத்தில் மிளகாய் பொடியை தூவி ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ரவுடி கும்பலுக்குஇடையேயான கோஷ்டி மோதலால் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர் அரசனட்டியை சேர்ந்தவர் விஜயகுமார்(எ) கவாலா(35). கட்டிட கான்ட்ராக்டர். இவர் நேற்றிரவு 10.50 மணியளவில் பெங்களூரில் இருந்து ஓசூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். பெங்களூர்&ஓசூர் சாலையில் சிப்காட் பஸ் ஸ்டாப்பில் இருந்து 100 அடி தூரத்தில் கார் வந்த போது மர்ம கும்பல் வழிமறித்தது. அதிர்ச்சியடைந்த விஜயகுமார் சுதாரிப்பதற்குள், அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் காரை அடித்து நொறுக்கியது. மேலும், விஜயகுமாரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவினர். உடனே விஜயகுமார் காரில் இருந்து இறங்கி தப்பியோடினார். ஓசூர்&பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அவரை ஓட ஓட விரட்டிச் சென்ற கும்பல் சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி தள்ளியது. இதில் விஜயகுமாரின் தலையில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் துடித்து துடித்து உயிரிழந்தார். அவரை கொலை செய்ததும் மர்ம கும்பல் அங்கிருந்து கார்களில் அதிவேகமாக தப்பிச் சென்றது. இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் அவர்கள், இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் எஸ்பி கண்ணம்மாள், டிஎஸ்பி கோபி, சிப்காட் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையான விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நடந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கொலையான விஜயகுமார், பெங்களூர் மடிவாளம் பகுதியில் வசித்து வந்தார். இவர் மீது கர்நாடக போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 33 வழக்குகள் உள்ளன. பிரபல ரவுடியான விஜயகுமாரின் கும்பலுக்கும், மடிவாளம் பகுதியை சேர்ந்த பிரபல தாதாவான குட்டி கும்பலுக்கும் இடையே கோஷ்டி மோதல் இருந்து வந்துள்ளது. இதனால் உயிருக்கு பயந்து விஜயகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓசூர் அரசனட்டிக்கு வந்து தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், பெங்களூரில் ‘ஒன்வே’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்துள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக விஜயகுமார் அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவரது கும்பலை சேர்ந்தவர்களும், குட்டி கும்பலை சேர்ந்தவர்களும் வந்துள்ளனர். அங்கு வைத்தும் 2 கும்பலுக்கும் இடையே பயங்கர தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குட்டியின் கும்பலை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் 3 கார்களில் விஜயகுமாரின் காரை பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதை தொடர்ந்து, இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.