சென்னை: ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி மெகருன்னிசாவை நெருங்கிய உறவினர்களே கொலை செய்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராயப்பேட்டை ஜான் ஜானிகான் சாலை தேவராஜன் தெருவை சேர்ந்த அலி முகமது உசேன் (59) இவரது மனைவி மெகருன்னிசா (57). சென்னை கோட்டையில் உள்ள ரிசர்வ் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் சுனித் அலி முகமது சையத்துக்கு, 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் துபாயில் வசித்து வருகின்றனர்.முகமது உசேன் தன் வீட்டின் தரை தளத்தை, வாடகைக்கு விட்டுள்ளார். முதல் தளத்தை பிரின்டிங் பிரசுக்கு வாடகை விட்டுள்ளார். இரண்டாவது தளத்தில் மனைவியுடன் வசித்து வந்தார். இவர் வேலைக்கு சென்ற பிறகு, மெகருன்னிசா மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். மதியம் 2 மணிக்கு மதிய உணவுக்காக, அலி முகமது உசேன் வீடு திரும்பினார். வழக்கமாக மெகருன்னிசா உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருப்பார். ஆனால், நேற்று, வீட்டின் வெளிப் பக்கமாக சாத்தப்பட்டிருந்தது. உடனடியாக கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, மெகருன்னிசாவின் கைகள் பின் பக்கமாக கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இது குறித்து, காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். மெகருன்னிசா வீட்டிற்கு விரைந்து வந்த ஜாம்பஜார் இன்ஸ்பெக்டர் வேலுமணி, அவரை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே, இறந்து விட்டதாக தெரிவித்தனர்.வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, பீரோவில் இருந்த 60 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு பேர் நேற்று பகல் 11.30க்கு மெகருன்னிசா வீட்டிற்கு வந்ததும் அவர்கள் 11.53 மணிக்கு வெளியே சென்றதும் தெளிவாக பதிவாகி இருந்தது. இதையடுத்து மெகருன்னிசா கொலை தொடர்பாக ஜாம் பஜார் இன்ஸ்பெக்டர் வேலுமணி, திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எழும்பூர் இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ள தனிப்படையினர், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த கொலையாளியின் உருவத்தை, அண்மையில் நடைபெற்ற மகனின் திருமண வீடியோ மற்றும் புகைப்படத்தை வைத்து ஒப்பிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். நன்கு அறிமுகம் ஆன நபர்களே இந்த கொலையை செய்திருக்க வாய்ப்பு உள்ளதால் கணவர் முகமது உசேன் நடத்தி வரும் பேக்கரிக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் மற்றும் மெகருன்னிசா வீட்டிற்கு வந்து செல்வோரின் 100 பேரின் பட்டியலை தயாரித்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.