ரயில் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க மும்பை ஐகோர்ட் மறுப்பு
மும்பை: மத்திய அரசு அறிவித்துள்ள ரயில் கட்டண உயர்வுக்கு இடைக்கால தடை விதிக்க மும்பை ஐகோர்ட் மறுத்து விட்டது. ரயில் பயணிகள் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணத்தை 6 சதவீதமும் உயர்த்தி ரயில்வே அமைச்சகம் கடந்த 20ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ரயில் கட்டண உயர்வுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மும்பை புறநகர் ரயில்களில் சீசன் டிக்கெட் கட்டணம் 100 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சிவசேனா மற்றும் பாஜ எம்பிக்கள் ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடாவிடம் நேற்று முறையிட்டனர். இதை தொடர்ந்து 80 கிலோ மீட்டர் தூரத்துக்கு புறநகர் ரயில் கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்ற ரயில்களுக்கான கட்டண உயர்வில் மாற்றம் செய்யப்படவில்லை.இந்நிலையில், ரயில் கட்டண உயர்வுக்கு தடை விதிக்கக்கோரி மும்பையை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் அபய் ஒகா மற்றும் ஏ.எஸ்.சந்துர்கர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரித்து, கட்டண உயர்வுக்கு இடைக்கால தடைவிதிக்க மறுப்பு தெரிவித்தது. மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். வழக்கின் இறுதி கட்ட விசாரணை வரும் 3 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் மும்பை மெட்ரோ ரயில் கட்டண உயர்வை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் தனியாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கையும் ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.