திருத்தணி: திருத்தணியில் பதுங்கியிருந்த கள்ளநோட்டு கும்பலை போலீசார் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். தமிழகத்தில் மீண்டும் கள்ள நோட்டு கும்பல் தலை தூக்கி உள்ளது தெரிய வரவே, மாநிலம் முழுவதும் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கள்ளநோட்டு கும்பல் நடமாட்டம் உள்ளதாக மாநில நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் திருமலை கொழுந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தணி பகுதியில் உள்ள கடை, வர்த்தக நிறுவனங்களில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.திருத்தணி-அரக்கோணம் சாலையில் உள்ள ஜெ.ஜெ.ரவி நகரில் பள்ளி அருகே உள்ள மைதானத்தில் கள்ள நோட்டு கும்பல் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் திருமலை கொழுந்து தலைமையில் போலீசார் தியாராஜன், சந்திரசேகர், உதயகுமார் ஆகியோர் நேற்று மாலை அவர்களை பிடிக்கச் சென்றனர். போலீசாரை பார்த்து தப்பியோட முயன்ற கும்பலை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
கள்ளநோட்டு வாங்க வந்திருந்த திருத்தணி முருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த நவீன்(28), குமரவேல்(22) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு கள்ள நோட்டு கொடுத்த ஆற்காடு பகுதியை சேர்ந்த ஏழுமலை(35) பிடிபட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். சோளிங்கர் அருகே கொண்டபாளையத்தை சேர்ந்த சத்யநாராயணா என்பவரின் மகன் லோகேஷ் (27) தனக்கு கள்ளநோட்டுகளை கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார், கொண்டபாளையம் விரைந்தனர். அங்கு லோகேஷை கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட மிஷின், பிரின்டர் ஆகியவற்றை கைப்பற்றி உள்ளனர். கள்ள நோட்டு களை புழக்கத்தில் விட உதவியாக இருந்ததாக கூறப்படும் சோளிங்கரை சேர்ந்த வினோத்குமார் (23), கொண்டபாளையம் ஜோதிராமன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.பிடிபட்ட கும்பலிடம் இருந்து 88 ஆயிரத்துக்கு 1000 ரூபாய் கள்ள நோட்டு, 5 லட்சத்துக்கு 500 ரூபாய் கள்ளநோட்டுகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய்க்கு 100 ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.பிடிபட்டவர்களிடம் திருத்தணி இன்ஸ்பெக்டர் சிகாமணி விசாரணை நடத்தி வருகிறார். இந்த கும்பல் தமிழகம் முழுவதும் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளதா? இவர்களுடன் வேறு கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.