குண்டுவெடிப்பு வழக்கு தீவிரவாதிகள் 3 பேரிடம் பெங்களூரில் விசாரணை
சேலம்: பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரிக்க வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போலீஸ் பக்ருதீன் உள்பட 3 பேரும் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டனர்.சேலம் பாஜ மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தீவிரவாதிகளான போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்கள் மீது இந்து முன்னணி நிர்வாகி வெள்ளையப்பன் உள்பட 5 பேரை கொலை செய்த வழக்கும் உள்ளது. இவ்வழக்குகளில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் அவர்கள் மீது சேலம் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான நகலும் அவர்களிடம் வழங்கப்பட்டது.இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்க பெங்களூர் போலீசார் முடிவு செய்தனர். இதன்படி கடந்த 20ம் தேதி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூவரையும் விசாரணைக்காக பெங்களூருக்கு அழைத்து சென்றனர். வருகிற 3ம் தேதி வரை அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் அனுமதி பெற்றுள்ளனர்.இந்நிலையில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு நேற்று சேலம் 4வது ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வேலூர் சிறை அதிகாரிகள், மூவரும் பெங்களூர் சென்றுள்ள தகவலை தெரிவித்தனர். இதையடுத்து மாஜிஸ்திரேட் விஜயலட்சுமி, வழக்கை வருகிற 1ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.