திருமலை:நிலக்கரி தட்டுப்பாட்டால் ராயலசீமா, விஜயவாடாவில் உள்ள அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மின்வினியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராயலசீமா அனல்மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட் மூலம் தலா 250 மெகாவாட் வீதம் தினசரி 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதற்காக சிங்கநேரியில் இருந்து 17 ஆயிரம் டன் நிலக்கரி தினசரி கொண்டு வரப்படுகிறது.
மாநில பிரிவினை காரணமாக சிங்கநேரியில் இருந்து கொண்டு வரப்படும் நிலக்கரி 7 முதல் 8 டன்னாக குறைந்தது. இதுகுறித்து மின் உற்பத்தி செய்யும் என்கோ நிறுவனம் அரசுக்கு தகவல் தெரிவித்தது. ஆனால், மாநில பிரிவினையில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகள் இதை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், தொடர்ந்து நிலக்கரி குறைந்ததால் நேற்று மதியம் 3 மணியளவில் 3 யூனிட்களில் இருந்து மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. மீதமிருந்த நிலக்கரியை வைத்து மாலை 6 மணி வரை மின் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர், அதுவும் நிறுத்தப்பட்டது.
தற்போது அனல் மின் நிலையத்தில் மிக குறைந்த அளவு இருக்கும் நிலக்கரியை கொண்டு மின் உற்பத்தில் செய்யப்பட்டால், மின்சாதன இயந்திரங்களில் பழுது ஏற்படும். பல கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.இதேபோல் விஜயவாடாவில் அனல் மின் நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு வந்த 1760 மெகாவாட் மின் உற்பத்தி யும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நேற்று இரவு திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் ஆந்திர மாநி லம் ராயலசீமா, தமிழ்நாடு, கர்நாடகா பகுதிகளில் மின் வினியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.