அரியலூர்: சோழ பேரரசி செம்பியன் மாதேவிக்கு அவரது பிறந்த ஊரான செம்பியக்குடியில் ஐம்பொன் சிலை அமைக்கப்படுகிறது. முதலாம் பராந்தக சோழன், கண்டராதித்த சோழன், அரிஞ்சய சோழன், சுந்தரசோழன் (2ம் பராந்தக சோழன்), உத்தமசோழன், ராஜராஜசோழன் ஆகிய 6 சோழ மன்னர்களுக்கு அரசியல் வழிகாட்டியாக விளங்கியவர் பேரரசி செம்பியன் மாதேவி. தனது காலத்தில் திருநல்லம்(கோனேரிராஜபுரம்) திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்), திருவாரூர் (அசலேஸ்வரர் கோயில்), திருமணஞ்சேரி, தெங்குரங்காடுதுறை (ஆடுதுறை), திருக்கோடிக்காவல், ஆதாங்கூர், குத்தாலம், திருவரக்கரை, திருச்சேலூர் என சோழமண்டலத்தில் செங்கற்கோயிலாக இருந்த இந்த 10 கோயில்களையும் கருங்கல் கட்டமைப்பாக மாற்றிக்காட்டியவர். மலைகளோ குன்றுகளோ இல்லாதது சோழநாடு. ஆகவே கருங்கற்கள் பல நூறு மைல்கள் பயணம் செய்து ஆயிரக்கணக்கான எடை கொண்ட கற்கள் வரவழைக்கப்பட்டு, கல் தச்சர்கள் இடைவிடாமல் பணிபுரிந்து கோயிலை கருங்கல் திருப்பணியாகச் செய்தார்கள்.
ராஜராஜ சோழனின் பாட்டிதான் செம்பியன் மாதேவி. 85வது வயதில் அழியா புகழுடன் காலமானார். தமிழகத்தில் 6 இடங்களில் இவரது சிலை அமைக்கப்பட்டாலும், இவரது பிறந்த ஊரான அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தை சேர்ந்த செம்பியக்குடியில் சிலை இல்லை. செம்பியக்குடியில் ஐம்பொன் சிலை அமைக்க தேவையான தங்கம், செம்பு, பித்தளை, வெள்ளி போன்ற பொருட்களை வீடு வீடாக சேகரிக்கும் முயற்சியில் சிலை அமைப்புக்குழு ஆர்வலர் சந்திரசேகரன்தலை மையில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.