நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் உரையை நேற்று நிறைவு செய்துள்ளார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசிய போது தனது எண்ண ஓட்டங்களை வெளியிட்டிருக்கிறார். பல்வேறு விஷயங்களில் அவரது தொலைநோக்கு பார்வை வரவேற்கத்தக்கதாக உள்ளது. ‘இன்றைய உலகில் மிக முக்கியமான தேவை மனித சக்தி. அதாவது, திறமைவாய்ந்த மனிதர்கள். நமது இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள். இவ்வளவு பெரிய சக்தியை கொண்டு நமது நாட்டை எவ்வளவோ முன்னேற்ற முடியும் என்று மோடி குறிப்பிட்டுள்ளார். தம்மிடம் உள்ள சக்தியை உணர்ந்தவனால் மட்டுமே சாதிக்க முடியும். அந்த வகையில் இந்தியாவின் பலத்தை அவர் நன்கு உணர்ந்து கூறியிருக்கிறார். இதை போல் அவரது பேச்சில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய வேறு சில முக்கிய அம்சங்கள்: * ஏழ்மையை அடியோடு ஒழிக்க வேண்டும். வறுமையில்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். * பலாத்கார சம்பவங்களை அரசியலாக்கக் கூடாது. பெண்களின் கவுரவத்துடன் நாம் விளையாடக் கூடாது. * நாட்டை முன்னேற்ற சின்னச்சின்ன அடி எடுத்து வைத்தாலே போதும். நிச்சயம் அதற்கு பலன் உண்டு. * கிராமங்களில் அடிப்படை வசதிகளை பெருக்க வேண்டும். கிராமங்களில் 24 மணி நேர மின்சாரம், கல்வி, விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் இருந்தால், கிராமங்களை விட்டு மக்கள் வெளியேற மாட்டார்கள். * மாநிலங்களிடம் மத்திய அரசு ‘பெரியண்ணன் போல் செயல்படக் கூடாது. மாநிலங்களுடன் இணைந்து செயல்படவே விரும்புகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படும் நல்ல திட்டங்களை வரவேற்று மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.இப்படியாக அவர் சொன்ன கருத்துகள் அனைத்துமே வரவேற்கத்தக்கவை. இந்த கருத்துகள் அனைத்தையும் அவர் பேச்சுடன் நிறுத்தி விடாமல் மனதில் நிறுத்தி கடைசி வரை இதே உறுதியுடன் செயல்பட வேண்டும். அப்படி மத்திய அரசு செயல்படும் பட்சத்தில் அறுதி பெரும்பான்மையுடன் புதிய அரசை தேர்ந்தெடுத்த மக்களின் நம்பிக்கை வீண் போகாது. குறிப்பாக, இளைஞர்களின் சக்தியை முழுமையாக பயன்படுத்தும் போது இந்தியா வேகமாக முன்னேறும் என்பதில் சந்தேகம் இல்லை.