நாகை மாவட்டத்தில் மாணவனே இல்லாத பள்ளிக்கு 2 ஆசிரியர்
வேதாரண்யம்: நாகை மாவட்டத்தில் மாணவனே இல்லாத தொடக்கப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தகட்டூர் ராமகோவிந்தன்காட்டில், 1962ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவங்கப்பட்டது. இப்பள்ளியில் தலைமையாசிரியர் உள்பட 2 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கடந்த கல்வியாண்டில் 5ம் வகுப்பில் 3 மாணவர்களும், 2ம் வகுப்பில் ஒரு மாணவனும் படித்தனர்.5ம் வகுப்பு படித்த 3 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 6ம் வகுப்பிற்கு அருகில் உள்ள வேறு பள்ளிக்கு சென்று விட்டனர். 2ம் வகுப்பு படித்த முருகபூபதி தேர்வில் வெற்றி பெற்று 3ம் வகுப்புக்கு சென்றான். முருகபூபதிக்கு 2 ஆசிரியர்கள் பள்ளி திறந்த நாளில் இருந்து பாடம் நடத்தி கொண்டிருந்தனர். திடீரென்று நேற்று முருகபூபதியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று மாணவனின் டி.சியைப் பெற்று சென்றனர். மாணவனே இல்லாத இந்தப் பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் உள்ள நிலையில், பள்ளி மூடுவிழா காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.