திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு அலுவலகம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஒருங்கிணைந்த செங்கல்பட்டு எம்ஜிஆர் மாவட்டத்தில் இருந்து கடந்த 1993ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதன்பிறகு திருவள்ளூரில் கலெக்டர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் 3 வருவாய் கோட்டங்கள், 10 தாலுகாக்கள், 14 ஒன்றியங்கள், 4 மகளிர் காவல் நிலையம் உள்பட 29 காவல் நிலையங்கள், 5 போக்குவரத்து காவல் நிலையம், வட்டார போக்குவரத்து அலுவலகம், மின் வாரியம், கனிமவளத்துறை, மாசு கட்டுப்பாடு வாரியம் உள்பட அரசு துறையை சேர்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
ஆனால் திருவள்ளூரில் தனியாக லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகம் தொடங்கப்படவில்லை. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் லஞ்சம் தொடர்பாக புகார் கொடுக்க காஞ்சிபுரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்துக்கு செல்கின்றனர். இதனால் ஒருவர் புகார் கொடுக்க செல்ல வேண்டும் என்றால் ஒருநாள் ஆகிவிடுகிறது. மேலும் புகார் கொடுத்தாலும் அங்கிருந்து அதிகாரிகள் வந்து நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாகவும் மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். சில நேரம் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லை என்றால் புகார் கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.