இளம்பெண் தீக்குளித்து சாவு கட்டிப்பிடித்த கணவரும் பலி
ஆவடி: ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சதீஷ் (22). அங்குள்ள பழக்கடையில் வேலை செய்தார். இவரது மனைவி சவுமியா (21). ஒன்றரை வயதில் ஸ்ரீவித்யா என்ற மகள் உள்ளார். கணவரின் குடிப்பழக்கத்தை சவுமியா கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு சதீஷ் போதையில் வந்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சதீஷ், குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வெளியே வந்துவிட்டார். இதன்பிறகு கதவை பூட்டிக்கொண்ட சவுமியா, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு கதவை உடைத்து சதீஷ் உள்ளே சென்றார்.
உடலில் தீப்பிடித்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த மனைவியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் தீயில் கருகினார். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து அவர்களை மீட்டனர். இதில் சவுமியா இறந்தார். சதீஷை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதற்கிடையே சிகிச்சை பெற்று வந்த சதீஷ் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவர்களது குழந்தை ஆதரவின்றி தவிக்கிறது.இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தீயில் கருகி கணவன், மனைவி பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.