தொடர்ந்து 7 நாட்களுக்கு அம்மன் சிலை மீது சூரிய ஒளி விழும் அதிசயம் பக்தர்கள் கண்டு வியப்பு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் அம்மன் சிலை மீது சூரிய ஒளி விழுந்ததை பக்தர்கள் கண்டு வியந்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து பரவசத்துடன் வழிபட்டனர்.கிருஷ்ணகிரி புதுப் பேட்டை வடக்கு மாடவீதியில் ஸ்ரீ ஞானராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 1ம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு அம்மன் மீது சூரிய ஒளி படும் அதிசயம் நடந்து வருகிறது.
இதேபோல் கடந்த 15ம் தேதி அம்மன் மீது சூரிய ஒளி விழுந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து இந்த நிகழ்வை பார்த்து வியக்கின்றனர். மேலும் பக்தி பரவசத்துடன், சிறப்பு பூஜையிலும் பங்கேற்கின்றனர்.
5ம் நாளான இன்று காலை 6.30 மணி அளவில் அம்மனின் காலில் விழத் துவங்கிய சூரிய ஒளி அம்மனின் தலையில் 7.15 மணிக்கு விழுந்தது. அம்மனின் முகத்தில் சூரிய ஒளி விழும் போது பக்தர்கள் பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்து, பூஜையில் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் தனம் ஸ்டாலின் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.