மோகன்லாலுக்கு திடீர் ஆயுர்வேத சிகிச்சை 1 மாதம் ஷூட்டிங் கேன்சல்
சென்னை: மோகன்லால் திடீர் ஆயுர்வேத சிகிச்சை பெறுவதால் 1 மாதமாக ஷூட்டிங்கில் பங்கேற்கவில்லை.கடந்த ஒரு மாதமாக ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறார் மோகன்லால். அங்கிருந்தபடி தனது இணையதள பக்கத்தில் ‘கடவுளுக்கு ஒரு கடிதம் என்ற தலைப்பில் கருத்து வெளியிட்டிருக்கிறார்.
அதில், ‘பாலக்காட்டில் கடந்த 1 மாதமாக ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறேன். ஆரவாரம் இல்லாத அமைதியான சூழலில் தனியாக தங்கி இருக்கிறேன். அதிகாலையில் கோயிலில் ஒலிக்கும் பக்தி பாடல்களை பல வருடங்களுக்கு பிறகு கேட்கிறேன். அதேபோல் மசூதி தொழுகையையும், டிரம்ஸ் இசையையும் கேட்கிறேன். என் நினைவுகள் இளமை காலத்துக்கு சென்றுவிட்டது. எனக்கு மிகவும் பிடித்த மாங்கனிகளும், பலாப்பழங்களும் மரத்தில் காய்த்து தொங்கிக்கொண்டிருந்த அந்த காலம் என் நினைவுக்கு வந்துவிட்டது. இப்போது பாஸ்ட்புட் தான் வேகமாக விற்கிறது. என் பிள்ளைகள் நவீன உலகில் வாழ்கிறார்கள். அவர்களது வாழ்க்கை இயந்திரகதியாகிவிட்டது. கடவுள் உலகையும், மனிதரையும் படைத்தான். விரும்பிய வாழ்க்கையை அவர்கள் வாழட்டும் என்று சுதந்திரமாக விட்டான். ஆனால் இப்போது உலகம் என்ன நிலையில் உள்ளது என்ற என் கேள்விக்கு இறைவன்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறி உள்ளார்.