போலி பாஸ்போர்ட் வழக்கில் அபு சலீமுக்கு 7 ஆண்டு சிறை ஐதராபாத் ஐகோர்ட் உறுதி
ஐதராபாத்:போலி பாஸ்போர்ட் வழக்கில் மும்பை நிழல் உலக தாதா அபு சலீமுக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை தண்டனையை ஐதராபாத் ஐகோர்ட் உறுதி செய்தது. மும்பை வெடிகுண்டு வழக்கில் தேடப்பட்டு வந்த நிழல் உலக தாதா அபு சலீம் சில ஆண்டுகளுக்கு முன்பு போர்ச்சுகல் நாட்டில் கைது செய்யப்பட்டார். போர்ச்சுகல் நீதிமன்ற அனுமதியுடன் அவரை சிபிஐ இந்தியா கொண்டு வந்தது. மும்பை குண்டுவெடிப்பு தவிர அவர் மீது போலி பாஸ்போர்ட் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. போலி பாஸ்போர்ட் வழக்கில் ஐதராபாத் சிபிஐ கோர்ட் கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதி அபு சலீமுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஐதராபாத் ஐகோர்ட்டில் அபு சலீம் அப்பீல் செய்தார். இந்த வழக்கை ஐகோர்ட் நீதிபதி துர்கா பிரசாத் விசாரித்து நேற்று தள்ளுபடி செய்தார். சிபிஐ கோர்ட் விதித்த 7ஆண்டு சிறை தண்டனை செல்லும் என உத்தரவு பிறப்பித்தார்.
அபு சலீம் கடந்த 2001ம் ஆண்டு ராமல் கமில் மாலிக் என்ற பெயரில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து ஐதராபாத் பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெற்றார். இந்த பாஸ்போர்ட்டில் தான் அவர் வெளிநாடு தப்பி சென்றார். இவருடன் சேர்த்து இவரது காதலியும் பாலிவுட் நடிகையுமான மோனிகா பேடிக்கும் போலி பாஸ்போர்ட் வாங்கினார். மோனிகா பேடியும் அபு சலீமுடன் சேர்த்து போர்ச்சுகலில் கைது செய்யப்பட்டார். அவருக்கு சிபிஐ கோர்ட் ஏற்கனவே 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. பின்னர் இந்த தண்டனையை சுப்ரீம் கோர்ட் 3 ஆண்டாக குறைத்தது. இவர் தற்போது விடுதலையாகி வெளியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.