கோவை:கோவையில் இன்று அதிகாலை முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை ரேஸ்கோர்சில், காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுவின் பங்களா உள்ளது. இதே வளாகத்தில் அவரது அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அலுவலகத்துக்கு இரவு நேர காவலாளியாக ராமசெட்டிபாளையத்தை சேர்ந்த மகராஜா (66) பணியாற்றி வருகிறார். பிரபு வீடு அருகே மாவட்ட கலெக்டர் பங்களா உள்ளது. இதனால் இப்பகுதியில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு இருக்கும்.
இந்நிலையில், இன்று அதிகாலை 2.45 மணியளவில் பைக்கில் வந்த 2 ஆசாமிகள் பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி அதை பனியன் துணியால் சுற்றி தீ வைத்து வீட்டுக்குள் வீசினர். அது அலுவலக காவலாளி அறை பக்கம் உள்ள டாய்லட் மீது பட்டு, வெடித்து தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த புற்கள் கருகின. பின்னர் அந்த நபர்கள் பைக்கில் தப்பினர். அப்போது அங்கு காவலாளி இல்லை.
கலெக்டர் பங்களாவில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போத்தனூர் போலீஸ்காரர் வேணுகோபால், ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தார். இரவு ரோந்து பணியில் இருந்த உதவி கமிஷனர் சார்லஸ் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று பார்த்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. வெடித்து சிதறிய பீர் பாட்டிலின் துண்டுகளை போலீசார் சேகரித்து எடுத்து சென்றனர். இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் வழக்கு பதிந்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.
ராஜீவ் கொலை வழக் கில் தண்டனை பெற்ற குற்ற வாளிகளை விடுவிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், சில அமைப்புகள் காங்கிரசுக்கு எதிராக போராடி வருகின்றன. இந்த விவகாரத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.