ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் நளினி, முருகன் உள்பட 7 பேரும் விடுதலை சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி உள்பட 7 குற்றவாளிகளையும் விடுதலை செய்யலாம் என மத்திய அரசுக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை அனுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி, ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு வெடித்து கொல்லப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக சிபிஐ புலனாய்வு செய்து, விடுதலைப் புலிகளே ராஜீவ்காந்தியை திட்டமிட்டு கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், நளினிக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது.
இதன்பின், தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். இம்மனுக்கள் மீது நீண்ட காலமாக முடிவு அறிவிக்கப்படவில்லை. இதை காரணம் காட்டி, தங்களை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர். பின்னர், இந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது. வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது. முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்களை பரிசீலிப்பதில் நீண்ட காலதாமதம் ஏற்படுத்திய காரணத்தால், அவர்களின் மரண தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைப்பதாக தீர்ப்பில் நீதிபதிகள் அறிவித்தனர். மூவரும் கடந்த 23 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். எனவே, இதை கருத்தில் கொண்டு அவர்களை விடுவிப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இதில், உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இதன்பின், சட்டசபையில் பேரவை விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கை வாசித்தார். அவர் கூறியதாவது:
ராஜிவ் கொலை வழக்கில் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் மேல் முறையீடு செய்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், நளினி, ஸ்ரீஹரன் என்ற முருகன், சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், பேரறிவாளன் என்கிற அறிவு ஆகிய4 பேரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தும், 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும், மீதமுள்ள 19 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, தூக்கு தண்டனை கைதிகள் கடந்த 7.10.2025 அன்று கவர்னரிடம் கருணை மனு சமர்ப்பித்தார்கள். இவை 27.10.2025 அன்று நிராகரிக்கப்பட்டன. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், அமைச்சரவை ஆலோசனையை பெற்று புதிய ஆணை பிறப்பிக்குமாறு கவர்னருக்கு 25.11.2025 அன்று உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் 19.4.2025 அன்று அமைச்சரவை கூடி விவாதித்தது. நளினியின் பெண் குழந்தை அனாதையாகி விடும் என்று முதல்வர் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும்; மற்றவர்களைப் பொறுத்த வரை அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் கவர்னருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது. இதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். அதன்படி, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. நளினிக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதன்பின், சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பும் கருணை மனுக்களை 28.4.2025 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. தமிழக அரசால் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் மீது 11 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர், 12.8.2025 நாளிட்ட கடிதத்தின் மூலம், ஜனாதிபதி இந்த கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்த மத்திய உள் துறை அமைச்சகம், இந்தத் தகவலை மேற்கண்ட கைதிகளுக்கு தெரியப்படுத்துமாறு தமிழக அரசை கேட்டுக் கொண்டது. இதன் அடிப்படையில், இந்தக் கடிதத்தின் விவரம் சம்பந்தப்பட்ட கைதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகிய மூன்று பேரையும் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தின. தனது மகன் பேரறிவாளனை விடுவிக்குமாறு, அவரது தாய் அற்புதம் அம்மாள் என்னை கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டார். இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவுக் கூறு 257 உட்பிரிவு (1)ன்படி, கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக் கூறு 72ன்கீழ் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின், அதே பிரச்சனையை மாநில ஆளுநர் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக் கூறு 161ன்படி எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மீண்டும் ஜனாதிபதிதான் கருணை மனுவை மறுபரிசீலனை செய்ய இயலும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டு இருந்ததையும் சுட்டிக் காட்டினேன்.
எனினும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், முருகன் உள்பட 4 பேருக்கும் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என ஜனாதிபதியை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானத்தை நானே முன்மொழிந்தேன். இது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்பின், முருகன் உள்பட 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களில், தங்களுடைய கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க 11 ஆண்டு காலதாமதம் ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டும், கடந்த 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டும்; தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். பின்னர் இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 18.2.2025 அன்று தீர்ப்பளித்ததோடு, ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் என்றும்; எனினும் குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 432 மற்றும் 433ன்படி, அரசு எடுக்கும் தண்டனை மாற்றுதல் அல்லது தள்ளுபடி செய்தல் நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து இன்று காலை எனது தலைமையில் அமைச்சரவை கூடி விவாதித்தது. குற்ற விசாரணை முறைச் சட்டம் 432ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. இதேபோன்று, ஏற்கெனவே ஆயுள் கைதியாக 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இருப்பினும், இந்த வழக்கு சிபிஐயால் புலனாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435ன்படி, தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.
எனவே, சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழக அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினை தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
2. ஏப்ரல் 15லிருந்து மே 15க்குள் 6 கட்டங்களாக மக்களவை தேர்தல் தேர்தல் ஆணையம் திட்டம்
புதுடெல்லி: மக்களவை தேர்தலை ஏப்ரல் 15லிருந்து மே 15வரை 6 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 6ம் தேதிக்கு பின்னர் வெளியிடப்படும். நடப்பு 15வது மக்களவையின் ஆயுள்காலம் மே 31 அன்று முடிவுக்கு வருகிறது. ஜூன் 1ம் தேதி 16 வது மக்களவை பதவி ஏற்க வேண்டும். மக்களவை தேர்தலை மே 15க்குள் 6 கட்டங்களாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. வாக்குப்பதிவு தேதிகளை முடிவு செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மார்ச் 6ம் தேதிக்கு பின்னர் தேர்தல் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்படும்.
மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் சட்டமன்ற தேர்தல்களை நடத்தவும் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த தேர்தலில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் துணை ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மொத்தம் 81.4 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் சுமார் 10 கோடி பேர் முதன் முறையாக மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். வேட்பாளர்களின் தேர்தல் செலவை ரூ.40 லட்சத்திலிருந்து ரூ.70 லட்சமாக உயர்த்துவது குறித்து ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது. நக்சலைட் பிரச்னை உள்ள சட்டீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களில் முதல் கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.