யானை ஊருக்குள் புகுந்தால் எச்சரிக்கும் சிகப்பு விளக்கு
கோவை: கோவை வனக்கோட்டத்தில் வாழும் யானைகள் உணவு, தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் அடிக்கடி நுழைகின்றன. அவை மனிதர்களை தாக்குவதால் உயிர் சேதங்கள் ஏற்படுகிறது. மேலும் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களையும் நாசம் செய்கின்றன. யானைகளால் ஏற்படும் உயிர், பயிர் சேதங்களை தடுக்க வனத்துறை சார்பில் தொண்டாமுத்தூர் தாளியூர் வனத்தில் 30 ஆயிரம் ரூபாய் செலவில் சோலார் பேனல் உதவியுடன் கூடிய எஸ்.எம்.எஸ் அலர்ட் டவர் திட்டம் தொடங்க்கப்பட்டது. 45 அடி உயரத்தில் கம்பம் நட்டு அதில் சிம்கார்டு எஸ்.எம்.எஸ் விவரங்களை பதிவு செய்யும் பேனல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேனலில் சிவப்பு மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. பாரஸ்டர், வனக்காப்பாளர், ஊர் தலைவர் உட்பட 7 பேரின் செல்போன் எண்களும் இந்த பேனலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. யானைகள் ஊருக்குள் நுழைந்தால், இந்த 7 பேரில் யாராவது ஒருவர் சோலார் பேனலில் உள்ள சிம்கார்டுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவார். எஸ்.எம்.எஸ் வந்ததும் பேனலில் உள்ள சிவப்பு மின் விளக்கு தொடர்ந்து ஒளிரும். உயரமான இடத்தில் அபாய சிவப்பு விளக்கு ஒளிர்வதை பார்த்தால் ஊருக்குள் யானைகள் வந்து விட்டது என ஊர் மக்கள் தெரிந்து கொள்ளலாம். உடனே பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும் அல்லது வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.