நாகர்கோவில்: தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,269 அதிகாரிகள்
பணியிடங்களை நிரப்ப மே 18ம் தேதி குரூப்-2 தேர்வை டிஎன்பிஎஸ்சி
நடத்துகிறது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் மாதம் 5ம் தேதி கடைசி நாள். தமிழக
அரசுத் துறைகளில் காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடம் நடத்த உள்ள தேர்வுகள்
விவரத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன்
ஏற்கனவே அறிவித்தார். நேர்முகத்தேர்வு அல்லாத குரூப்-2 தேர்வுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் 2,269 பணியிடங்கள்
உள்ளன. தமிழ்நாடு சட்டசபை எழுத்தர் பணி, தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணைய உதவியாளர், சமூக நலத்துறை உதவியாளர், காவல்துறை உதவியாளர்,
வருவாய்த்துறை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும்
உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான
தேர்வு மே மாதம் 18ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. ஆன்லைன் வழியாக தேர்வாணைய
இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும். குறைந்தபட்சம் 18 வயது
பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும்.
சிறைச்சாலை, போலீஸ்,
மருத்துவம், கிராம சுகாதார பணிகள், போக்குவரத்து கழகம், பதிவுத்துறை,
தொழிலாளர் நலம், நெடுஞ்சாலைத்துறை, வரலாற்றுத்துறை உள்ளிட்ட பல துறைகளில்
உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு
படித்திருந்தாலும் போதும். வருவாய் நிர்வாகத்துறை உதவியாளர் பணியிடத்திற்கு
பி.இ. படிப்பு தகுதி ஆகாது. பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் போன்ற மற்ற
பட்டப்படிப்புகள் தகுதியானது. தேர்வு எழுத மையங்கள் தமிழ்நாடு முழுவதும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிக்கவேண்டும் என்ற முழு
விவரமும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் உள்ளது.
விண்ணப்பிக்க மார்ச் மாதம் 5ம் தேதி கடைசி நாள். எழுத்து தேர்வு மே மாதம்
18ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணிவரை நடைபெறும்.
மேலும் விரிவான கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.