லார்ட்ஸ் மைதானம் 200ம் ஆண்டு கொண்டாட்டம் சச்சின்-வார்ன் தலைமையில் 50 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூலை 5ந்தேதி நடக்கிறது
கிரிக்கெட் உலகின் தாயகமாக லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானம் கருதப்படுகிறது. இந்த மைதானம் உருவாக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக சிறப்பு கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் விதிமுறைகளை வகுக்கும் மேரில்போன் கிரிக்கெட் கிளப்-ரெஸ்ட் ஆப் தி வேர்ல்டு அணிகள் 50 ஓவர்கள் கொண்ட போட்டியில் மோதுகின்றன.
இதில் மேரில்போன் கிரிக்கெட் கிளப் அணிக்கு பாரத ரத்னா விருது பெற்ற சச்சின் தலைமைவகிக்கிறார். ரெஸ்ட் ஆப் வேர்ல்டு அணிக்கு ஆஸி. சுழல் ஜாம்பவான் வார்ன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கிரிக்கெட் போட்டி ஜூலை மாதம் 5ந்தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. சச்சின் அணியில் டிராவிட்டும் இடம் பெற்றுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் 1998களில் உலக பேட்ஸ்மேன்கள் பலர் வார்னின் பந்து வீச்சில் ஆட்டம் கண்ட நிலையில் சச்சின் சூறாவளியாய் சுழன்றடித்து ரன் மழை பொழிந்தார். குறிப்பாக ஷார்ஜா போட்டியை இன்றும் யாராலும் மறக்க முடியாது. இரண்டு ஜாம்பவான்களும் மீண்டும் களத்தில் குதிக்க உள்ள இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் இப்போதே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.