‘நெல்லை அருகே அரசு பஸ் டயர் வெடித்து, ஆற்றுக்குள் கவிழ்ந்தது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்’ இந்த செய்தியை ஆழமாக பார்த்தால் பல்வேறு பூதாகரங்கள் மறைந்திருப்பதை உணரலாம். ஆற்றில் குறைவான தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததாலும், அமலை செடிகள் இருந்ததாலும் பயணிகள் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருந்திருந்தால், பயணிகளின் கதி என்னவாகியிருக்கும்? இப்போதுள்ள அரசு பஸ்களில் பலவற்றை காயலான் கடைகளில் எடைக்கு கூட எடுக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மிக பழசாக உள்ளன. பல பஸ்களில் உள்ளே அமர்ந்திருக்கும் பயணிகளின் மேல் அருவியாக மழை தண்ணீர் விழும் ‘சிறப்பு ஏற்பாடு’, பின்பக்க டயர்கள் மீதான டாப் கழன்று, சக்கரம் சுற்றுவதை சீட்டில் அமர்ந்தபடி பார்க்கும் ‘அரிய’ வாய்ப்பு, டிரைவர் சீட்டுக்கு அருகே இருக்கும் இன்ஜினின் மூடியே இல்லாமல் ‘உஷ்ணம்’ அளிப்பது, ரோட்டில் நடந்து செல்பவர்களுக்கும், வாகனங்களில் செல்பவர்களுக்கும் ‘அன்பு’ கீறல்கள் போடும் வகையில் கிழிந்து தொங்கும் பக்கவாட்டு தகரங்கள் என்று பல குறைபாடுகளை அரசு பஸ்களில் மட்டும்தான் காணலாம்.
தமிழகத்தில் 2012ல் சாலை விபத்துகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 16,175. கடந்த ஆண்டில் இது 10,642 ஆக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டைக்காட்டிலும் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், நவீன சாலைகள், மேம்பாலங்கள், சிக்னல்கள் என்று பல்வேறு வசதிகள் வந்த பின்னரும் விபத்துகள் தொடர்வது வேதனையான விஷயம்.
கடந்த 2012ல் அரசு பஸ்களால் மட்டும் நிகழ்ந்த விபத்துகளின் எண்ணிக்கை 1,167. இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,280. சென்னையில் மட்டும் 114 பேர் இறந்துள்ளனர். 2013ன் புள்ளிவிவரம் இன்னும் வெளியாகவில்லை. அரசு பஸ்களால் ஏற்பட்ட பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கிய காரணம், அவற்றில் உள்ள குறைபாடுகள்தான் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. டயர்கள் கூட சில முறை ரீடிரேடிங் செய்யப்பட்டு ஓட்டப்படுகின்றன.
கப்பல்களை இத்தனை ஆண்டுகளுக்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்று அவற்றை தயாரிக்கும்போதே முடிவு செய்யப்படுகின்றன. வாழ்நாளை முடித்த கப்பல்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுவதில்லை. அதேபோல், ஒரு வாகனத்தை இத்தனை ஆண்டுகள்தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை அரசு வாகனங்களுக்கு முதலில் கொண்டு வரவேண்டும். ஏனெனில், இவைதான் அதிகபட்சமாக உபயோகப்படுத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில், குறிப்பிட்ட ஆண்டுக்கு பின்னர் அவற்றை மறுபயன்பாட்டுக்கு ஏலம் விடாமல், அதை காயலான் கடைக்கு போடும் திட்டத்தை கொண்டு வந்தால், உயிர்கள் தப்பிக்கும். அரசின் பராமரிப்பு செலவுகளும் குறையும்.