அகில இந்திய அளவிலான ஐஐடி - ஜேஇஇ நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தை பார்க்கும் போது, தமிழக மாணவர்கள் பின்தங்கி வருகிறார்களோ என்றொரு கவலையை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஐஐடிகளில் படிப்பவர்களுக்கு லகரங்கள் முதல் கோடிகள் வரை சம்பளமாக கிடைப்பதால், எப்போதுமே இதற்கு கடும் போட்டி உள்ளது. மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்தான் ஐஐடியில் நுழைய முடியும்.
சென்னை ஐஐடியில் 838 இடங்கள் உள்ளன. அதாவது அகில இந்திய அளவில், அதிகப்படியான மாணவர் இருக்கை உள்ள ஐஐடிகளில் 8வது இடம். ஆனால், 2013ம் ஆண்டுக்கான ஐஐடி-ஜேஇஇ நுழைவுத் தேர்வு முடிவை ஆராய்ந்தால், தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதல பாதாளத்தில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம், இவர்கள் சமச்சீர் கல்வி முறையில் பயின்றவர்கள். அதேசமயம், மத்திய அரசு பாடத்திட்டத்தை படித்து வரும் ஆந்திர மாணவர்கள் இத்தேர்வில் முதலிடம் பிடித்துள்ளனர்.
நல்ல நோக்கத்துடன் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டபோதும், மாணவர்கள் எளிதில் வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில், அதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உண்மையிலேயே அதிகரித்துள்ளதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால், இதை வைத்து கொண்டு அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று விட முடியாது என்பதுதான் நிஜம்.
மத்திய பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள், சாதாரண தேர்வுகளைவிட நுழைவுத் தேர்வில் அதிகம் மதிப்பெண் பெறுகின்றனர். ஆனால், சாதாரண தேர்வுகளில் மதிப்பெண்களை அள்ளும் சமச்சீர் கல்வி திட்டத்தில் பயிலும் மாணவர்கள், நுழைவுத் தேர்வுகளில் பின்தங்குகின்றனர். அதாவது போட்டி தேர்வுக்கு உரிய முறையில் சமச்சீர் கல்வி திட்டத்தில் பயிலும் மாணவர்கள் தயார் செய்யப்படவில்லை என்பதே இதன் மூலம் தெரிய வருகிறது. தமிழக மாணவர்கள் எல்லா துறையிலும் சாதிக்க வேண்டும். அப்போதுதான் மாநிலத்தின் பெருமை வெளியே தெரியும்.
அகில இந்திய தேர்வுகளுக்கு உரிய வகையில் மாணவர்களை தயார்படுத்த, வரும் கல்வி ஆண்டில் இருந்தே சமச்சீர் கல்வி திட்டத்தில் தேவையான மாற்றங்களை செய்ய கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.