பவுலர்கள் முறைத்தால் பதிலுக்கு முறைப்பேன்
ஆடுகளத்தில் அதிரடி, மனதில் தன்னம்பிக்கை, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர் இந்தியாவின் இளம்வீரர் கோஹ்லி. நியூசிலாந்துடனான முதல் ஒன்டேயில் மற்ற வீரர்கள் சோடை போன போது சதம் விளாசி தனது திறமையை நிரூபித்தார். வேகப்பந்தை தனக்கு சாதகமாக்கி கொள்ளும் பக்குவத்தை அவர் பெற்றுவிட்டார்.
இதுகுறித்து கோஹ்லி கூறியது:
140 - 145 கி.மீ. வேகத்தில் பந்து பவுன்ஸ் ஆகி வரும்போது ஒன்று அதை விட்டு விட வேண்டும். அல்லது முன்னே சென்று அடித்து ஆட வேண்டும். பவுன்சர் பந்து வரும்போது காலை பின்னோக்கி நகர்த்துவோம். அப்போது நமது உடல் எடையை அந்த கால் தாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் பந்தை அடிப்பதா, விடுவதா என்ற குழப்பம் ஏற்படும்.
உயரே வரும் பந்தை காலை முன்னோக்கி வைத்து அடிக்க முற்படும்போது உடல் எடையை கால் எளிதில் தாங்கி பிடிக்கும். அப்போது பந்தை அடித்து ஆடலாம். நான் ஒருசில ஓவர்கள் தாக்கு பிடித்து விட்டால் அதன்பிறகு அதிரடியாக ஆடுவது எனக்கு எளிதாகிவிடும். நான் இப்போது 21 வயதானவன் அல்ல. அதை நான் கடந்து விட்டேன்.
வேகத்தை சமாளிப்பது எப்படி என நன்றாகவே தெரியும். நான் அதிரடியாக ஆடுவதை கட்டுப்படுத்தி இருந்தால் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டேன். கடந்த போட்டியில் ஒரு பந்துவீச்சாளர் என்னை பார்த்து முறைத்தார். நானும் பதிலுக்கு அவரை முறைத்தேன். ஆனால் வார்த்தைகளால் திட்டிவிடக்கூடாது. எதிர் பந்துவீச்சாளர் என் சிந்தனையை குலைக்க இவ்வாறு செய்வார்கள். அதுவே நான் அவுட்டாகாமல் விளையாடுவதற்கு ஊக்கத்தை கொடுத்து விடுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.