பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை சொல்பவர் ஸ்ருதி
மும்பை:பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பே இல்லை என்று வருத்தத்துடன் கூறினார் ஸ்ருதி ஹாசன்.மும்பையில் தனிமையில் வீடு எடுத்து தங்கி இருக்கும் ஸ்ருதி ஹாசனை மர்மநபர் ஒருவர் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு கருதி தோழி வீட்டில் தங்கி இருந்த அவர் தற்போது பட ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். இதற்கிடையில் ஸ்ருதியை இனி யாரும் நேரடியாக சந்திக்கக்கூடாது என்று அவரது தாயார் சரிகா நிபந்தனை விதித்திருக்கிறார். அவருக்கென ஒரு மேனேஜரையும் பணிக்கு அமர்த்தி இருக்கிறார். இனி யாராவது ஸ்ருதியை தொடர்பு கொண்டு பேச வேண்டுமென்றால் மேனேஜர் மூலம்தான் பேச வேண்டும் என்று சரிகா தெரிவித்திருக்கிறார். மேலும் ஸ்ருதிக்கு தனியார் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ருதி எங்கு சென்றாலும் அவருடன் சென்று இவர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள்.
இதுகுறித்து ஸ்ருதி ஹாசன் கூறும்போது,‘என் மீது நடந்த தாக்குதல்போல் இந்த நாட்டில் நிறைய நடந்துகொண்டுதான் இருக்கிறது. தனியாக வாழும் பெண்கள் இதுபோன்ற கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. தாக்குதல் சம்பவம் நடந்தபிறகு நான் ரொம்பவே பயந்துவிட்டேன். அந்த அதிர்ச்சியிலிருந்து இப்போதுதான் மீண்டு வருகிறேன். தனியாக இருக்காதே என்று எனக்கு பலர் அட்வைஸ் செய்கிறார்கள். ஆனால் எனக்கு தனியாக இருக்கத்தான் பிடிக்கிறது என்றார்.