ஹைதி: நியூசிலாந்தில் கிஸ்போர்ன் என்ற இடத்தில் வசித்து வந்தவர் அமன்தீப் சிங் (வயது 22). இந்த ஆண்டு ஜனவரி 24ம் தேதி அமன்தீப் சிங்கின் உடல் அழுகிய நிலையில் ஹைதி கடற்கரை அருகே புதரில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்தி விசாரணையில், கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி, கிரிஸ்டல் பிளாக் (வயது 26) என்ற பெண் தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி ரோட்டில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக காரில் சென்ற அமன்தீப் சிங்கிடம் கிரிஸ்டல் பிளாக் லிப்ட் கேட்டார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் கிரிஸ்டல் பிளாக் தனது தோழியான போகாய் (வயது 25) என்பவரின் செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளார். இருதினங்கள் கழித்து கிரிஸ்டல் பிளாக்கும், போகாயும் தனது நண்பர்களுடன் மது அருந்தியபடி பாலியல் ரீதியான எஸ்எம்எஸ்களை அமன்தீப் சிங்குக்கு தொடர்ந்து அனுப்பியுள்ளனர். இவ்வாறு 3 பேரும் மாறி மாறி 200க்கும் அதிகமான எஸ்எம்எஸ்களை பரிமாறிக் கொண்டனர். பின்னர் கிரிஸ்டல் பிளாக்கும், போகாயும், அமன்தீப் சிங்கை பாலியல் உறவு வைத்து கொள்ளலாம் என கூறி ஹைதி கடற்கரைக்கு அழைத்து சென்றனர். அங்கு அமன்தீப் சிங்கை அடித்து கொன்று உடலை புதர் ஒன்றில் வீசினர். அவரது கார், கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றை திருடிக் கொண்டு தப்பி சென்றனர். பின்னர் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஹைதி மாலில் ஏராளமான பணத்தை ஏடிஎம்மில் எடுத்துள்ளனர். இதுகுறித்து தனது மாஜி கணவரிடம் கிரிஸ்டல் பிளாக் தெரிவித்துள்ளார். சில தினங்கள் கழித்து மாஜி கணவரும், அவரது உறவினரும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து 2 பெண்களும் போலீசாரிடம் சிக்கினர் என்று விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் இரண்டு பெண்களுக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நியூசிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.