சென்னை:பக்தி படங்களில் சிறுவனாகவும், ‘குறத்திமகன் படத்தில் ஹீரோவாகவும் நடித்த ஸ்ரீதர் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61.‘திருவிளையாடல் படத்தில் சிறுவயது முருகன் வேடத்தில் நடித்தவர் மாஸ்டர் ஸ்ரீதர். ‘சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமாÕ என்று அவ்வைபாட்டியாக நடிக்கும் கே.பி.சுந்தரம்பாளிடம் கேட்பார். பிறகு, ‘ஒன்று இரண்டு..‘ என்று வரிசைப் படுத்தி தன் புகழை பாடும்படியும் அவர் வசனம் பேசி நடித்தது பிரபலம்.
இதுதவிர ‘கந்தன் கருணை உள்ளிட்ட படங்கள் மற்றும் ஜெய்சங்கர் நடிக்கும் படங்களில் அவருக்கு இளவயது வேடம் ஏற்றும் பல படங்களில் நடித்திருக்கிறார். சிறு வயதிலேயே வசன உச்சரிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஜெமினி, கே.ஆர்.விஜயா நடிப்பில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய குறத்தி மகன் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட ஸ்ரீதர், ஆதிசங்கரர் வேடத்தில் 500க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர டி.வி. நாடகங்களிலும் நடித்திருக்கிறார். கொட்டிவாக்கத்தில் வசித்து வந்தார். சமீபகாலமாக அவர் உடல் நலமில்லாமல் இருந்தார். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அதற்குள் அவர் இறந்துவிட்டார். உடல் தகனம் இன்று மாலை பெசன்ட் நகர் சுடுகாட்டில் நடக்கிறது. ஸ்ரீதருக்கு இந்திரா என்ற மனைவி, பிரசாந்த், ரக்ஷித் என 2 மகன்கள் உள்ளனர்.