புதுச்சேரி:சென்னையில் நேற்றிரவு நடந்த விபத்தில் புதுவை முதல்வர் ரங்கசாமியின் கார் சிக்கியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். விபத்தில் சதி வேலை உள்ளதா என்பது குறித்து இருமாநில போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சென்னை எழும்பூரில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க புதுவை முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை சென்னை சென்றார். அங்கு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புதுவை திரும்பினார். அவருடன் என்ஆர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், முதல்வரின் தனி உதவியாளர் குமார் ஆகியோர் உடனிருந்தனர். பைலட் கார்கள் முன்னும், பின்னும் சென்றன.
இரவு 9.35 மணியளவில் சாந்தோம் பேராலயம் அருகே வந்தபோது எதிரே வந்த சொகுசு கார், பைலட் கார் மீது நேருக்கு நேர் மோதி முதல்வரின் கார் மீது இடித்து நின்றது. இதில் பாதுகாப்பு போலீசார் வெங்கடேசன், செல்வம் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர். முதல்வர் ரங்கசாமி காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவலறிந்த அடையாறு போக்குவரத்து போலீசார் ரங்கசாமியை பத்திரமாக மீட்டனர். பின்னர் மற்றொரு காரில் பத்திரமாக அவரை புதுவைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்வர் ரங்கசாமி விபத்தில் சிக்கிய தகவல் அறிந்த ஆதரவாளர்கள், பெண்கள், என்ஆர் காங். கட்சியினர் ஏராளமானோர் திலாசுப்பேட்டை வீட்டில் நள்ளிரவில் திரண்டனர். அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம் ஆகியோர் மரக்காணத்தில் முதல்வரை வரவேற்று நலம்விசாரித்து அழைத்து வந்தனர். அங்கிருந்து நள்ளிரவு 12.25 மணிக்கு ரங்கசாமி வீட்டுக்கு வந்தார். காரை விட்டு இறங்கியதும், அவரது காலில் விழுந்து பெண்கள், ஆதரவாளர்கள் கதறி அழுதனர். ஒன்றும் இல்லை, நலமாக இருக்கிறேன். காலையில் பார்த்து கொள்ளலாம் என கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். முதல்வர் கார் மீது மோதிய சொகுசு கார் டிரைவர் சேப்பாக்கம் அருணாச்சலம் தெருவை சேர்ந்த முபாரக் அலி (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். விபத்துக்கு காரணமான அதிமுக கொடி கட்டப்பட்டிருந்த அந்த சொகுசு காரில் 6 பேர் போதையில் இருந்துள்ளனர். இதனால் விபத்து தற்செயலாக நடந்ததா அல்லது சதி வேலையா என்று விசாரிக்கின்றனர். விபத்து குறித்து புதுவை காவல் துறையும் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.