இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே விசாகப்பட்டினத்தில் 2வது ஒருநாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராவோ இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தார். இந்திய வீரர்கள் தங்கள் பங்கிற்கு ரன்களை சேகரித்தனர். ரோகித்சர்மா 12, தவான் 35, கோஹ்லி 99, யுவராஜ்சிங் 28, ரெய்னா 23, டோனி 51, ஜடேஜா 10, அஸ்வின் 19 ரன்களை எடுத்தனர்.
50 ஓவரில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 288 ரன் எடுத்தது. கோஹ்லி ஒரு ரன்னில் தனது சதத்தை தவறவிட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. டோனி 40 பந்துகளில் 51 ரன் எடுத்து ரசிகர்களை மகிழ்வித்தார். 289 ரன் என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற வேகத்தில் ஆட்டத்தை தொடங்கியது.
சார்லஸ் 12 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாமுவேல்ஸ் 8 ரன்னுக்கு வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணி சற்று தடுமாறியது. ஆனால் பாவெலும், பிராவோவும் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். பாவெல் 51 ரன்னுக்கும், பிராவோ 50 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் பிராவோ 18 ரன்னுக்கு வெளியேறினார்.
5 விக்கெட் இழப்புக்கு 185 ரன் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தடுமாறியது. ஆனால் சிம்மன்சும், சம்மியும் ஆட்டத்தின் போக்கை மாற்றினர். ஒரு புறம் சிம்மன்ஸ் நிதானமாக ஆட சம்மி அதிரடியாக ஆடினார். இந்த ஜோடியை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். சிம்மன்ஸ் 67 ரன்கள் எடுத்து வெளியேற அடுத்து வந்த ஹோல்டர் 7 ரன்னில் அவுட்டானார்.
இதனால் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் அந்த நம்பிக்கையை சம்மி தடை போட்டார். அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 49.3 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.
சம்மி ஆட்டமிழக்காமல் 63 ரன் எடுத்தார். 45 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் விளாசினார். 3 போட்டி கொண்ட தொடரில் 1&1 என்ற சமநிலையில் உள்ளது. கடைசி ஒருநாள் போட்டி கான்பூரில் வருகிற 27&ம் தேதி நடக்கிறது.
கேப்டன்ஸ் கார்னர்
டோனி: நாங்கள் பவுலிங் செய்யும் போது பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. பந்து வீச்சாளர்களால் பந்தை சரியாக கூட பிடிக்க முடியவில்லை. ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றதே பந்து வீச்சாளர்களுக்கு வெற்றி என்று சொல்ல வேண்டும். பனிப்பொழிவு இல்லையென்றால் 289 ரன் என்ற இலக்கு 400 ரன்னுக்கு சமமாகும் என்றார்.
பிராவோ: எங்கள் அணி பேட்டிங் சிறப்பாக இருந்தது. 4 பேர் அரை சதம் அடித்தனர். வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள் பங்கு அதிகம். ஹோல்டரும், ராம்பாலும் சிறப்பான பந்துவீச்சை தொடங்கி வைத்தனர். பெருமாளின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. இந்திய அணியை 300 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது சிறப்பு. உலகின் சிறந்த பேட்ஸ்மேனான டோனிக்கு பந்துவீசுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் பாவெல், சிம்மன்ஸ், சம்மி ஆகியோர் சிறப்பாக பந்துவீசி ரன்னை கட்டுப்படுத்தினர். மொத்தத்தில் இந்த வெற்றி அணியின் கூட்டு முயற்சியால் கிடைத்தது. ஹீரோ கார்னர்
ஆட்டநாயகன் விருது பெற்ற சம்மி கூறியது: இத்தொடர் எனக்கு ஏமாற்றத்தை அளித்து விடுமோ என்று நினைத்தேன். ஆனால் முக்கியமான கட்டத்தில் என்னுடைய ஆட்டம் சிறப்பாக அமைந்தது. சிம்மன்சுடன் நல்ல ஜோடி அமைந்தது. கடைசி 10 ஓவர்களில் 90 ரன் அடித்தோம். இது அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தது என்றார்.