கை கட்டை விரலை கடித்து துப்பி சிறையில் இருந்து கைதி ஓட்டம் போராடி பிடித்தார் காவலர்
திருச்சி:கை கட்டை விரலை கடித்து துப்பிய போதும், வலியை பொறுத்து கொண்டு சிறையில் இருந்து தப்பியோடிய கைதியை தலைமை காவலர் பிடித்தார்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வேலங்குடியை சேர்ந்தவர் காந்தி (31). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் 2007ம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 13ம் தேதி சிறை தோட்டத்தில் தலைமை காவலர் மணி கண்காணிப்பில் இருந்தார். அப்போது மரத்தில் ஏறி காந்தி வெளியில் குதித்து தப்பினார். அவரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பணி நேரத்தின் போது அலட்சியமாக இருந்ததாக தலைமை காவலர் மணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், திருவாரூர் அருகே வயல்வெளியில் காந்தி இருப்பதாக தகவல் கிடைத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட மணி உள்ளிட்ட 2 பேர் அங்கு சென்றனர். பின்புறமாக சென்று காந்தியை பிடிக்க இருவரும் முயன்றனர். சுதாரித்து கொண்ட காந்தி, திடீரென மணியின் இடது கை கட்டை விரலை கடித்து துப்பினார். மணிக்கு ரத்தம் பீறிட்டது. வலியை பொறுத்து கொண்ட மணி, விடாப்பிடியாக காந்தியை பிடித்து கையை பின்புறமாக கட்டினார். துண்டாகி போன கட்டை விரலை எடுத்து கொண்டு மணி உள்ளிட்ட இருவரும் திருவாரூர் வந்தனர்.
அங்கு கிளை சிறையில் காந்தியை அடைத்துவிட்டு இருவரும் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். துண்டாகி போன கட்டை விரலில் ரத்த ஓட்டம் நின்று விட்டதால் ஒட்ட வைக்க வாய்ப்பு இல்லை என்று டாக்டர்கள் கூறினர். திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தலைமை காவலர் மணி இன்னும் 4 மாதத்தில் ஓய்வு பெறவுள்ளார். சஸ்பெண்ட் காரணமாக மன உளைச்சலுடன் இருந்த அவர், கைதி காந்தியை பிடிக்காமல் ஊர் திரும்ப மாட்டேன் என்று கூறி மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் பகுதியிலேயே இருந்தார். அவரது கடும் முயற்சிக்கு பலன் கிடைத்தது என்று சிறை துறை டிஐஜி துரைசாமி கூறினார்.