சன் டி.வியில் ஒளிபரப்பாகும் மகாபாரதம் தொடரில் நாளை பஞ்சபாண்டவர்கள் அறிமுகம்
சென்னை:சன் டி.வியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் பிரமாண்டத் தொடர் ‘மகாபாரதம்’. ‘பூவிலங்கு’ மோகன், அமித் பார்கவ், ஓ.ஏ.கே சுந்தர், இளவரசன், மனோகர், தேவிபிரியா, ஐஸ்வர்யா, பூஜா உட்பட பலர் நடிக்கின்றனர். சினி விஸ்டாஸ் தயாரிக்கும் இந்தத் தொடருக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. நாளை ஒளிபரப்பாகும் தொடர், இதன் 25&வது வாரமாகும்.
இதுபற்றி இதன் இயக்குனர் ‘செங்கோட்டை’ சி.வி.சசிகுமார் கூறியதாவது:
கவுரவர்கள் மற்றும் பஞ்சபாண்டவர்கள் அறிமுக காட்சிகள் நாளைய தொடரில் ஒளிபரப்பாகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக இதை உருவாக்கி உள்ளோம். அர்ஜுனனின் வில் வித்தை சாகசங்கள், பீமன், துரியோதனனுக்குமான சண்டைக் காட்சிகள், மற்றும் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் நிகழ்வுகள் எல்லாவற்றையும் கிராபிக்ஸில் பிரமிப்பாக இருக்கும் வகையில் உருவாக்கி உள்ளோம். ஏற்கனவே இந்தியில் வந்த ‘மகாபாரதம்’ வெறும் 56 எபிசோட்தான். இதனால் அதிகமாக கதை சொல்லி இருக்க மாட்டார்கள். இது 200 எபிசோடை தாண்டும் என்பதால், மகாபாரதத்தில் இருந்து சொல்லப்படாத புதிய கதைகளையும் சொல்லுகிறோம். இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். இவ்வாறு சசிகுமார் கூறினார்.